ஹூலுன்பியர்

சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

தற்போது 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது. லீக் சுற்றில் தென் கொரியாவை ஏற்கனவே வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி இதிலும் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியீன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், உத்தம் சிங் மற்றும் ஜர்மன்பிரீத் சிங் தலா 1 கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.