நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “என்னுடன் நீண்ட விவாதங்களில் ஈடுபடும் எனது நண்பரை இழந்தது மிகவும் வேதனையளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14ம் தேதி) டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீதாராம் யெச்சூரியின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அவரது குடும்பத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

செப்டம்பர் 14ம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள அவரது உடல் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சீதாராம் யெச்சூரியின் உடல் மருத்துவ ஆய்வுக்காக வழங்கப்படுகிறது…