மதுரை:  திமுக ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படைதன்மையாக இல்லை. அதனால் திமுக அரசு தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என   அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மேலும்,  உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக சந்திப்பதற்கு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஒரே பள்ளியில் படித்த 5 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவர்களுக்கு பாராட்டு விழா, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திறமை அற்ற முதல்வர் நாட்டை ஆண்டு வருகிறார்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாக தெரிந்தது. இப்போது இந்த ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படை தன்மையாக இல்லை. அதனால்தான் நாங்கள் மட்டுமல்ல அனைத்து எதிர்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2018 – 19ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வி ல் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இந்த நிலை மாற வேண்டும் அதுமட்டுமின்றி கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் அதிமுக ஆட்சி காலத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்முலம் தற்போது ஏராளமானோர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதுபோல,. ஏழு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.700 கோடி மதிப்பில் காவேரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கியது.

அதிமுக காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே தற்போது திமுக அரசு இந்த திட்டத்தை முடக்கியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் காவேரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவாக பணிகள் நடைபெற்று திட்டம் நிறைவேற்றப்படும்.

 உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக சந்திப்பதற்கு தயாராக உள்ளது” என்று ஈபிஎஸ் கூறினார்.