சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் பவளவிழாவையொட்டி  “கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் கழகக்கொடி ஏற்றிக் கொண்டுவோம்”  என திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலினன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திமுகவின் பவள விழா செப்டம்பர் 17ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  கழகத்தினர் அனைவரது இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து சித்தாத்தங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17), கழகம் தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு செப்.17-ம் தேதி சென்னை, YMCA மைதானத்தில் கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து கழகத்தினர் வீடுகளிலும் கழக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

கழக ஒருங்கிணைப்புக்குழுவுடன் நேற்று (செப்.8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கழகப்பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு கழகத்தினர் அனைவரது இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என்ற கழகத்தலைவரின் அறிக்கை வெளியிடப்படுகிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் – அலுவலகங்கள் – வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்.

இவ்வாறு கூறி உள்ளார்.