நெல்லை: தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும் என  தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்துள்ள பழமையான அம்பலவாணர் கோயிலில் 112 ஆண்டுகளுக்கு பின்  நேற்று (செப்டம்பர் 8ந்தேதி) காலையில் கோலாகலமாக கும்பாபிஷேக விழா  நடந்தது.  இந்த  விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  உள்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  தொன்மையான திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தவும், தேர்களை பாதுகாக்க கொட்டகைகள் அமைக்கவும், கோயில் குளங்களை பாரமரித்து பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (நேற்று) மானூர் அம்பலவாணர் கோயில் உள்பட 55 திருக்கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அம்பலவாணர் கோயிலுக்கு சொந்தமான நஞ்ைச நிலம் 173 ஏக்கர், புஞ்சை நிலம் 28 ஏக்கர் கோயில் திருப்பணிக்காவும், நித்ய பூஜை செலவுகளுக்காவும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி அமைந்த பின் திருவட்டாறு போன்ற கோயில்கள் மட்டுமல்லாமல் உத்திரமேரூர் வரதராஜபெருமாள் கோயில் மற்றும் 300 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூர் சிவன் கோயில் 123 ஆண்டுக்கு பின் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொன்மையான 16 கோயில்களுக்கும், நூறு ஆண்டுகளுக்குட்பட்ட 60 கோயில்களுக்கும் திமுக ஆட்சி காலத்தில்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 2250 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும்.

805 கோயில்களுக்கு சொந்தமான 6 ஆயிரத்து 703 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இடங்களில் கோயில்களின் பெயர்களுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் ரூ.92 கோடியில் கோயில்களில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயில்களுக்கு ரூ.59 கோடியில் புதிய மரதேர்கள் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

ரூ.11 கோடியே 92 லட்சம் செலவில் பாரம்பரிய பழமையான மரத்தேர்கள் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.