டெல்லி

த்திய அமைச்சர் அமித்ஷா ஆந்திர வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அமைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சுமார் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில்

“ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்(பேரிடர் மேலாண்மை) தலைமையில் ஒரு மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இக்குழுவினர் நேரில் சென்று வெள்ள மேலாண்மை, நீர்த்தேக்க மேலாண்மை, அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு உடனடி நிவாரணத்திற்கான பரிந்துரைகளை வழங்குவார்கள்.”

என்று தெரிவித்துள்ளார்.