திருவனந்தபுரம்

லையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவெளியிட்ட அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதைத்  தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அவ்வகையில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தம் இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.

நிவின் பாலி தனது எக்ஸ் வலைதளத்தில்,

“நான் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தி வெளியாகி உள்ளதை கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன்,

மேலும் இதற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும்.”

என்று பதிந்துள்ளார்.