கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் வைஷ்னா (34) மற்றும் அலுவலகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மற்றொருவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

உயிரிழந்த இருவரது உடலும் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாப்பனம்கோட்டை சந்திப்பில் உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் இன்று மதியம் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர் பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.