மராவதி

ந்திர மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் நிலச்சரிவால் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது.  கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

உயிரிழந்த நவுத் மேக்னா(25), பொலம் லட்சுமி(49), புர்காதி லாலு(38) மற்றும் ஜம்பனா அன்னபூர்ணா(55) ஆகிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டூர் பகுதியில் ராகவேந்திரா(38) என்ற ஆசிரியர் தனது இரண்டு மாணவர்கள் சவுதிஷ்(6) மற்றும் மன்வித்(9) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்றபோது, மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.

மங்கலகிரியில் உள்ள கண்டாலயப்பேட்டா கிராமத்தில் நிலச்சரிவால் வீடுகள் மீது கற்பாறைகள் விழுந்ததில் 68 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவடத்துக்கும் மீட்புப் பணிகளுக்காக தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.