பாட்னா’

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான  என்.டி.ஏ. கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்து நிதிஷ்குமாரின் ஜே.டி.யு. மிக முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. மத்திய அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வக்பு வாரியத்தில் பல சட்டத் திருத்தங்களை முன்மொழிந்து இருந்தது.

இந்தச் சட்டத் திருத்தம் தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தற்போது முன்மொழிந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள, தெலுங்கு தேசம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்த விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில், நிதிஷ்குமார் கட்சியும் அதில் இணைந்துள்ளது.

தற்போது நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீகாரில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. பீகாரில் சுமார் 18 சதவீத இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில், நிதிஷ் கட்சி இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளது. இந்த வக்பு வாரிய சட்டத்திற்கு ஜே.டி.யு. ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்தநிலையில் தற்போது சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.