ஸ்ரீநகர்

உலகில் அன்பின் மூலம் வெறுப்பை ஒழிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு -காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கூட்டத்தில் உரையாற்ரி உள்ளார்

ராகுல் காந்தி தனது உரையில்.

“மக்களவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி, நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், வெறுப்பு மிக்க உலகில் அன்பைக் காட்ட வேண்டும். வெறுப்பினை அன்பினால் தோற்கடிக்க முடியும். நாமெல்லாம் சேர்ந்து அன்பினால் வெறுப்பினை ஒழிப்போம். ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவம், அவர்களின் மாநிலம் மிக முக்கியமான விஷயம் என்பதால் இங்கு வந்துள்ளோம்.

இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது. இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு-காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு-காஷ்மீர் மக்களின் அச்சத்தைப் போக்குவதே எங்களின் நோக்கம்”

என்று தெரிவித்துள்ளார்.