ஸ்ரீஹரிகோட்டா

இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

பூமியை கண்காணிக்க ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைகோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதற்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் மற்றும் ஊழியர்களை செய்தியாளர்கள் பாராட்டினர்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம்

”எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும். எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும். தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது”.

என்று தெரிவித்துள்ளார்.