மும்பை

யிற்சி மருத்துவர்களின் போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவருடைய உடல் அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறையினர் இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

மகாராஷ்டிரா பயிற்சி மருத்துவர்களுக்கான கூட்டமைப்பு தொடர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளது. அவர்கள் தங்களுடைய கோரிக்கைள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கை இந்த முடிவு உறுதியானது எனவும் கோரிக்கைகள் திருப்தி ஏற்படும் வகையில் நிறைவேறும் வரை அதனை நிறுத்த போவதில்லை என்றும் தெரிவிக்கிறது.

நேற்று தெற்கு பீகாரின் பெரிய அரசு மருத்துவமனையான அனுகிரக நாராயண் மகத் மருத்துவ கல்லூரியின் மருத்துவர்களும், அகர்தலா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாமின் கவுகாத்தி மருத்துவ கல்லூரியின் இளநிலை மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும், 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.