டெல்லி

இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்துள்ளது. செந்தில் பாலாஜி இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இதற்கு அமலாக்கத்துறை அளித்த பதில்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதன்படி, பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.