கோழிக்கோடு

கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் நிக்கிய ஆட்சியர் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களாக கேரளாவின் வயநாட்டில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ தாண்டி உள்ளது.  இங்குநிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்று, கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் ஸ்நேஹில் குமார் சிங், நிலச்சரிவு பாதித்த விளங்காடு பகுதிக்கு மாலை 5.45 மணியளவில் நேரில் சென்றார். அவர், செயின்ட் ஜார்ஜ் மேனிலை பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த முகாமுக்கு சென்றபோது, திடீரென புதிதாக அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

நிலச்சரிவில் ஆட்சியரும் அவருடன் வந்த மற்ற அதிகாரிகளும் சிக்கி கொண்டதால் மீட்பு படையினரின் முயற்சியால், கயிறு கட்டி அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.  இது கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட 11-வது நிலச்சரிவு என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கனமழையை தொடர்ந்து விளங்காடு பகுதியருகே, மஞ்சாசெலி என்ற இடத்தில் அதிச்சிப்பாரா மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவால் யாரும் உயிரிழந்த தகவலோ அல்லது காணாமல் போன செய்தியோ வரவில்லை. தொடர்ந்து கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, காவல்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.