டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்தில் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. இது  நாடு முழுவதும் பரவியுள்ளதா? என மத்தியஅரசு மற்றும் என்டிஏ-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் குறித்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். அவர் கூறும்போது, ’’பிஹார் போலீஸ் விசாரணையில் மே 4ஆம் தேதியே வினாத்தாள் கசிவு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வினாத்தாள் அந்தந்த வங்கிகளில் வைக்கப்படும் முன்னரே கசிந்துள்ளது தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் , வினாத்தாள் கசிவு குறிப்பிட்ட  சில இடங்களில் மட்டும் நடந்துள்ளதா? ஹசாரிபக் மற்றும் பாட்னாவில் மட்டுமே நடைபெற்றுள்ளதா அல்லது முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பரவியுள்ளதா? எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது? என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மேலும், மே 4ஆம் தேதியே வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிவிதாகவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின்போது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் , ’’தேசியத் தேர்வு முகமையின் கூற்றுப்படி நீட் வினாத்தாள்கள் ஏப்ரல் 24ஆம் தேதியே அனுப்பப்பட்டு விட்டன. மே 3ஆம் தேதி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று சேர்ந்துள்ளன. ஏப்ரல் 24 முதல் மே 3 ஆகிய நாட்களுக்கு இடையிலான காலகட்டத்தில் தனி நபர்களின் கைகளில் இருந்துள்ளது ’’ என்று குற்றம் சாட்டினர்.

நீட் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில், வழக்கறிஞர் தீரஜ் குமார் சிங் கூறுகையில், “இன்று, என்டிஏ வெளியிட்ட தரவுகளை நாங்கள் நிரூபித்துள்ளோம். சிகாரில் உள்ள சில மையங்கள் முழு நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டுள்ளதை நாங்கள் நிரூபித்துள்ளோம். குஜராத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் மையத்தை தேர்வு செய்துள்ளார், மேலும் அவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும், NTA வெளியிட்ட தரவுகளுடன் கசிவு ஏற்பட்டதற்கான ஆதாரத்தை தயவுசெய்து காட்டுமாறு நீதிமன்றம் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது …” என்றார்.

தொடர்ந்து  மதிய உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணை  நடைபெற உள்ளது.