டெல்லி:  ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்க கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்  முன்வைத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோற்று மொத்தம் 23 தனிநபர் மசோதாக்கள் மாநிலங்களைவியல் பட்டியலிடப்பட்டுள்ளது.

சமீப காலமாக பல நீதிபதிகள் ஓய்வுபெற்றதும் அரசியல் கட்சிகளில் ஈடுபடுவதும், ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் நீதித்துறை மற்றும் அந்த நீதிபதிகளின் வழங்கிய தீர்ப்புகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.  மேலும் பல ஓய்வுபெற்ற நீதிபதிகளை மாநில அரசுகள், சில கமிட்டிகள் அமைத்து, அதற்கு தலைமை பதவி வழங்கி அறிக்கை கேட்டு வருகிறது.  இதுபோன்ற செயல்கள் நீதிபதிகள் மீதான சந்தேக பார்வையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களில் பல நீதிபதிகள் மத்திய பாஜகவில் இணைந்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் பானர்ஜி கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அடுத்த இரண்டே நாளில் பாஜகவில் இணைந்தார்.  மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா, ஓய்வுபெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தார். அதுபோல, தமிழ்நாட்டிலும் சில ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு போன்றோரின் செயல்கள், கருத்துக்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி சில தனிநபர்  மசோதாக்களை முன்வைப்பது வழக்கம். அதன்படி நீதிபதி உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்வது, செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘டீப் பேஃக்’ தொழில்நுட்பத்துக்கு இந்தியாவில் தடை விதிப்பது, குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்வது என 23 தனிநபர் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த தனி நபர் மசோதாக்களை இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர். தனிநபர் மசோதா என்பது ஒரு பிரச்னை குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் ஆகும். தனிநபர் மசோதாக்களுக்கு பெரும்பாலும் ஆதரவு கிடைக்காது. எனவே இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாது. சுதந்திரம் அடைந்த பின்னர் 1952-ஆம் ஆண்டில் இருந்து 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.