திருவனந்தபுரம்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோட்டயம் மாவட்டத்தில் அதிகாலை முதல் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் விழுந்ததுடன், வாகனங்களும் சேதமடைந்தன.

இந்திய வானிலை ஆய்வு மையம் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.