டெல்லி:  நாடு முழுவதும்  13 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தலில் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,   தமிழ்நாடு உள்பட பெரும்பாலான இடங்களில்  இண்டியா  கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது

நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனா கார்ட், தக்சின் பாக்தா , மணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் அமர்பாரா , பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு , இமாச்சலப் பிரதேசத்தில் டேக்ரா ஹமிர்பூர் நலகர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில்,  11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, டிஎம்சி மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் 13 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.