சிம்லா
கனமழை காரணமாக இமாசல பிரதேச மாநிலத்தில் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நீடித்து வருகின்றன.
நேற்று சம்பா மாவட்டத்தின் பார்மர் பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கொய்நல்லா மற்றும் டோனாலி இடையே ஏற்பட்ட இந்த பேரிடரால் அப்பகுதி வழியாக போக்குவரத்து முடங்கி இருக்கிறது.
இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள மணிமகேஷ் யாத்திரைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 12 முக்கிய சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. சிம்லாவில் 5, மாண்டியில் 4, காங்ராவில் 3 என சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இன்றும், நாளையும் மாநிலத்தில் பல பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.