டெல்லி

சிபிஐ சந்தோஷ் காளி விவகாரம் குறித்த விசாரணையை எதிர்த்த மேற்கு வங்க அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநிதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காளி கிராமத்தில் பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக் கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்தியாவை உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  அந்த உத்தரவில் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நில அபகரிப்பு புகார்களை விசாரித்து, அடுத்த விசாரணையின்போது விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க அரசு தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில் கொல்கத்தா நீதிமன்றத்தின் உத்தரவு, காவல்துறை உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் உறுதியை குலைக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, யாரோ ஒருவரை பாதுகாப்பதில் அரசு ஏன் அக்கறை காட்ட வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய்யதுடன் மேற்கு வங்க மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.