டெல்லி

டந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அமைசர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை, தடுக்கக் கூடாது என ஹரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

ஆயினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து, பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  ஆனால் டெல்லி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த, ஹரியாணாவில் உள்ள தங்கள் ஆட்சியை பயன்படுத்தி, செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது

கடந்த 21 ஆம் தேதி டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காத ஹரியானா மாநில பாஜக அரசை கண்டித்து, தெற்கு டெல்லியில் உள்ள போகலில் ‘ஜல் சத்தியாகிரகம்’ என்ற பெயரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் அதிஷி துவக்கி 4 வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்.

தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக  எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.