டெல்லி

டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சினைக்காக அமைச்சர் அதிஷி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

சமீபகாலமாக டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது டெல்லிக்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை அம்மாநில அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஆம் ஆத்மி அரசு சட்டவிரோத டேங்கர் தண்ணீர் விநியோகத்தையும், ஊழலையும் ஆதரிக்க டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

ஜூன் 21-ந்தேதிக்குள் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சத்யாகிரக போராட்டத்தை மேற்கொள்வேன் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 19.06.2024 அன்று அறிவித்தார்.

இன்று அதிஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று வரை சுமார் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அநீதிக்கு எதிராக போராட சத்யாகிரக பாதையை பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதன்படி இன்றைய தினம் தண்ணீர் சத்யாகிரகத்தை நான் தொடங்குகிறேன்.

இன்று ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குவேன். டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும்”

என்று பதிவிட்டிருந்தார்.

அதன்படி அமைச்சர் அதிஷி மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோரோடு கட்சியின் பிற எம்எல்ஏக்களும் இன்று மதியத்திலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.