புனே

த்திய அமைச்சரவையில் ஒரே ஒரு இடம் கிடைத்ததால் சிவசேனா அதிருப்தி அடைந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்றார். இந்தஅரசில் சிவசேனாவுக்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவி, அதுவும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிவசேனா அதிருப்தியை தெரிவித்துள்ளது.

அமைச்சரவையில்  பாஜகவை சேர்ந்த 4 பேர், சிவசேனா மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றனர். அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் அந்த கட்சிக்கு இணை மைச்சர்பதவி வழங்க பிரதமர் மோடி முன்வந்தும் இணை அமைச்சர் பதவியை ஏற்க தேசியவாத காங்கிரஸ் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனாவும் தனது அதிருப்தியை வெளியிட்டு உள்ளது.

சிவசேனாவை சேர்ந்த ஸ்ரீரங் பர்னே எம்.பி. செய்தியாளர்களிடம்,

”தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளத்தை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தான் 3-வது பெரிய கட்சியாக உள்ளோம். எனவே எங்களுக்கு குறைந்தது ஒரு கேபினட் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஒரு இணை அமைச்சர் பதவி மட்டும் தான் வழங்கப்பட்டு உள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு கூட கேபினட் மந்திரி பதவிகள் கிடைத்தன.

உதாரணமாக 2 எம்.பி.க்களை மட்டுமே வைத்துள்ள குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மந்திரிசபையில் கேபினட் இடம் கிடைத்தது. பீகாரில் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற ஜித்தன் ராம் மஞ்ஜிக்கும் கேபினட் அமைச்சர்பதவி கிடைத்துள்ளது.

நான் சிவசேனாவுக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாக தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தைரியமான நடவடிக்கை தான் மகாராஷ்ட்ராவில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பாஜகவிடம் இருந்து நியாயமான நிலைப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

என்று கூறி உள்ளார்.