டெல்லி

நேற்றிரவு மோடி 3 ஆம் முறை பிரதமராக பதவி ஏற்றுகொண்டார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின.

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அக்கட்சி 543 தொகுதிகளில் 240 இடங்களையே அந்த கட்சி பெற்றது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த கூட்டணி தொடங்கியது.

இந்த கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவு தெரிவித்தன. மேலும் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை அந்த கட்சிகள் தேர்வு செய்தன. நேற்று முன்தினம் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டணியின் நாடாளுமன்றக்குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். மறைந்த ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பிறகு மத்திய அமைச்சர்களும் பதவியேற்றதால் அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  இந்த விழாவில் பல்வேறு அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரதமர் மோடியை வாழ்த்தினர். விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.