டெல்லி: டெல்லி  மதுபான கொள்கை முறைகேட்டில் பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா ரூ.292 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தான் எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். ஆனால், நீதிபதி நீதிபதி கவேரி பேவேஜா  அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து,  டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கவிதாவுக்கு எதிராக அமலாக்கத்துறை  துணை குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிபதி கவேரி பேவேஜா முன்னிலையில்  தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடிக்கும் மேல் பணமோசடி நடந்துள்ளது என்றும்,  இதில் வழக்கில் சிக்கிய ‘இண்டோஸ் பிரிட்ஸ்’ நிறுவனம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கையூட்டாக தந்த ரூ.100 கோடி, நிறுவனம்தின் லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.192.8 கோடி என மொத்தம் ரூ.292.8 கோடி கவிதாவுக்குத் தொடர்புடையதாகும்.

வழக்கில் உள்ள தொடர்புகள் மற்றும் தனது ஈடுபாட்டை மறைப்பதற்கு, கைப்பேசிகளில் இருந்த எண்ம ஆதாரங்களை கவிதா அழித்துள்ளார். கைப்பேசியிலுள்ள தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.