பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தான்.

இந்த நிலையில் அந்த சிறுவனுக்கும், ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பத்தன்று சிறுவன் தனது பேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக அவளது கிராமத்துக்கு சென்றான். அங்கு இருவரும் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டி ருந்தனர்.

இதை சிறுமியின் குடும்பத்தினர் பார்த்துவிட்டனர். இதனால் கோபமடைந்த அவர்கள் அந்த சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் சிறுவன் பலத்த காயமடைந்தான்.

பின்னர் அவனை சிறுமியின் குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை, அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.