டில்லி
தேர்தலில் விவசாயிகள் உள்ளிட்ட மனிதச் சின்னங்கள் ஒதுக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் தாக்கல் செய்த மனுவில்.
‘விவசாயி உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிக்கு அளித்தால் அவற்றால் வாக்காளர்கள் தவறாக வழி நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற மனிதர்கள் தொடர்புடைய தேர்தல் சின்னங்களை ஒதுக்கக்கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’
எனக் கோரப்பட்டது.
நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று இந்த மனுவை விசாரித்த போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜஷ்வந்தி அன்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். அவரது வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர்.
தங்கள் தீர்ப்பில்,
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்கிறோம். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவாக அளிக்கவும் அனுமதி அளிக்கிறோம்’
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.