ஜம்மு

காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி  ஒருவர் அதில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். 

தற்போது ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காத வகையில் பனிப் பொழிவு உள்ளது. காணும் இடம் எல்லாம் வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ரம்மியமான சூழல் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது.

குல்மார்க் பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திடீரென ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு வெளிநாட்டு பயணி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவிர பனிச் சரிவில் சிக்கிக் கொண்ட 5 பேரைப் பாதுகாப்புப் படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பனிச் சறுக்கு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் பனிச் சரிவில் மாயமான வெளிநாட்டுப் பயணியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த  வெளிநாட்டுச் சறுக்கு வீரர்கள் உள்ளூர் வாசிகள் துணை இல்லாமல் பனிச்சறுக்கில் ஈடுபட்டதால் பனிச்சரிவு பகுதிகளுக்கு அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.