கொல்கத்தா

பாஜக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த வழக்கு பற்றி மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர் மீதும் கடுமையான வாதங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆவார்.

நாடாளுமன்றத்தில் இவர் அதானி குறித்துக் கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம், பரிசுப்பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துப்பே பகிரங்கமாக்க குற்றம் சாட்டினார்.

மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான தனது லாகின் ஐ.டி-யை ஹிராநந்தனியும், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள மஹுவா மொய்த்ரா அனுமதித்தார் என்றும் நிஷிகாந்த் துபே கூறினார்.

மேலும் இது குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே புகார் கடிதம் எழுதியதையடுத்து, இதில் நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு உத்தரவிட்டது.

பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மஹுவா மொய்த்ரா ”என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் எனது தலைமுடியைக்கூடத் தொட முடியாது” என்று கூறி உள்ளார்.