நாகர்கோவில்

நாக ர்கோவில் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகரில் உள்ள மீனாட்சி புரத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது. இன்று மதியம் 12.40 மணி அளவில் இந்த அறையில் இ திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தன.

மளமளவென்று தீ பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்துச் சிதறின. போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துத் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

35 க்கும் மேற்பட்ட வீரர்கள் 2 வண்டிகளில் வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அண்ணா பஸ் நிலையம் மற்றும் மீனாட்சி புரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

கோட்டாறு காவல்நிலையத்தில் விபத்து குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புகார் செய்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து முதலில் டெப்போவில் ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.