இஸ்லாமாபாத்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது

பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இம்ரான்கான் கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டங்களில் வன்முறை வெடித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நினைவுப் பரிசுகளைக் கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து அந்த பணத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேர்தல் ஆணையம் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அவரை 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், வன்முறை போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஜாமீன் கோரி இம்ரான்கான் தரப்பில் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 9 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.