டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஊட்டிக்கு வந்து பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையால்  பறிபோனது. உச்சநீதிமன்றம் இந்த தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆகி நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார்.

இன்றும் நாளையும் அவர் தனது தொகுதியான வயநாட்டைப் பார்வையிட செல்வதற்காகத் திட்டமிட்டு உள்ளார்.  செல்லும் வழியில் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் வருகிறார். இதையொட்டி அவர், டில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்குக் கோவை விமான நிலையம் வருகிறார்.

காலை 9.15 மணிக்குக் கோவை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் புறப்படும் ராகுல் காந்தி, 11 மணிக்கு ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வருகிறார். அவர் அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவைச் சந்தித்துப் பேசிய பின்னர் அதேவிடுதியில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்துக் கேட்டு அறிந்து கொள்கிறார்.

அவர் மதிய உணவை முடித்த பின்பு 1 மணியளவில் ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அந்த மக்களிடம் கலந்துரையாடுகிறார். அவர்களது கோவிலையும் பார்வையிட்ட பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.

வயநாடு செல்லும் வழியில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் ராகுல்காந்தி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வருகையையொட்டி தனியார் தங்கும் விடுதி, முத்தநாடுமந்து கிராமத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுப் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.