தாராசுரம், வீரபத்திரர் கோயில்
வீரபத்திரர் கோயில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் எனப்படும் ஒட்டக்கூத்தரின் சமாதி ஆலயம் உள்ளது.
அமைப்பு
சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகளுக்கு இலக்காகியுள்ளன என்பதை கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் சோழர் கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக உறுதி செய்யமுடிகிறது.
கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் திருமேனி காணப்படுகின்றது. தற்போது (சூன் 2015) இடிந்த நிலையில் ராஜகோபுரம் உள்ளது. நந்தி மண்டபம், முகமண்டபத்துடன் கூடிய கருவறை, கருவறையின் பின்புறம் ஒட்டக்கூத்தர் சமாதி ஆகியவை காணப்படுகின்றன. சுற்றுச்சுவர் எதுவுமின்றி கோயில் திறந்த வெளியில் இருக்கிறது.
ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை
திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை காணப்படுகின்றது. சமாதியின் மேல் லிங்கம் காணப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டக்கூத்தரின் சமாதிக்கு 16 சூலை 2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.