சென்னை

காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.

காவல் நிலைய அதிகாரிகளைப் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாகச் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். தவிரப் பெயரளவில் உயர் அதிகாரிகள் பொதுமக்களை ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது.

இன்று காவல் அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களைக் கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரம் தோறும் புதன்கிழமை அன்று மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் காலை முதல் மாலை வரை ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உயர் அதிகாரிகளைப் பொதுமக்கள் எளிதில் சந்திக்கும் வகை வகுக்கத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.