சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூன் 20ந்தேதி) 10வது மற்றும் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 5ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அரசு பள்ளிகளில் தேர்வு முடிவு கடுமையாக சரிந்துள்ளதாகவும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில்  இதுவரை இல்லாத அளவுக்கு தேர்ச்சி சதவகிதம் குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப் பள்ளிகளும் 38 உயர்நிலைப் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 5 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும்போது, திமுகவின் ஓராண்டு ஆட்சியின் காலக்கட்டத்தில்தான் தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது.

ஏற்கனவே இதற்கு முந்தைய ஆண்டு தேர்ச்சி விகிதத்தை எடுத்துக்கொண்டோமானால், 20க்கும் அதிகமான மாநகராட்சிகளில் 10வது, 12வது வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு சூளைமேடு சென்னை அரசு உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட சைதாப்பேட்டை, பெரம்பூர் மாநகராட்சி பள்ளிகளிலும் தேர்ச்சி குறைந்துள்ளது.

நேற்று வெளியான  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், சென்னை மாநகராட்சிமேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 86.53%பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு முடிவுகளில், சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 75.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வினை சென்னை மாநகராட்சி பள்ளிகளில்  படித்த 3,164 மாணவிகள், 2,478 மாணவர்கள் என 5,642 பேர்  எழுதிய நிலையில் 4,882 பேர் (2,907 மாணவிகள், 1,975 மாணவர்கள்) மட்டுமே  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 மற்றும் 10 ஆம் வகுப்பபில்  தேர்ச்சி விகிதம் கடும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு மேயர் பிரியா இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநகராட்சியின் கல்வித்துறையின் முறையற்ற நடவடிக்கை, இஓ, ஏஇஓ போன்றவர்கள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யாதது, தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு ஒழுங்காக வருகை தராதது, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் கல்வி போதிக்காதது போன்ற காரணங்களால்தான் மாணாக்கர்களின் தேர்ச்சி குறைந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.