டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 1,241 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும்,  67,084 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,24,78,060 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி புதிதாக மேலும் 1,241 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,06,520 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 1,67,882 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,11,80,751 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 7,90,789 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 46,44,382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,71,28,19,947 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.