சென்னை: தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து இருந்தார். இந்நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மீண்டும் 2வது முறை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அரியலூர் வசித்து வருகிறார்.

சமீபத்தில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் எ அரியலூரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது  முகநூல் பதிவில்,  உடல் சோர்வு, சளி, காய்ச்சலை தொடர்ந்து, கடும் தொண்டை வலி ஏற்பட்டதால் பரிசோதனை செய்து கொண்டேன். இதில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.