பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸை தொடர்ந்து பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் ஜோகோவிச் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் ரோக்சனா மரசினேனு-விடம் இந்த ஆண்டு நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்க தடையேதும் விதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் போது தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பிரான்ஸ் அரசின் இந்த திடீர் அறிவிப்பு ஜோகோவிச் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.