டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்று மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், முதன்முறையாக கோவா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும இதுவரை578 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 141 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் அறிவித்தது. அதில் ராஜஸ்தானில் 43 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களில் 30 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  இன்று மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரான்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, ஜெய்ப்பூரில் இருவருக்கும், உதய்ப்பூரில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டது. ராஜஸ்தானில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது.

அதுபோல,  கோவாவில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி பிரிட்டனிலிருந்து வந்த, 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்தார்.