மும்பை
மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக நெருக்கடி அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. இந்த கூட்டணி கடந்த சில நாட்களாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன்பிறகு மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் மீது பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில் மகாராஷ்டிர மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் மீது தானேவை சேர்ந்த பொறியாளர் ஆனந்த் கர்முசே புகார் அளித்தார். அந்த புகாரில், ” சென்ற ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி, இரவு போலீசார் சிலர் எனது வீட்டுக்கு வந்திருந்தனர். முகநூலில் ஆவாத்தின் படத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், அமைச்சர் ஜிதேந்திர ஆவாத்தின் பங்களாவுக்குக் கொண்டு சென்று அங்கு அவர்கள் என்னைக் கடுமையாக தாக்கினர். காவல்துறையினர் தாக்கும்போது, அமைச்சர் அங்கு இருந்தார். அமைச்சர் முன்னிலையில்தான் இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறின’ என்று கூறியிருந்தார்.
மகாராஷ்டிர அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. வர்தக் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அமைச்சர் காவல்துறையைத் தனது அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகமாக அமைச்சர் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. காவல்துறையினர் அவரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்த பிறகு, அவரை உடனடியாக நேற்றிரவே தானே நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.
அமைச்சர் ஜிதேந்திர ஆவாத் சார்பில், ஜாமீன் கோரி அளித்த மனுவை விசாரித்த நீதிபதி அவரை 10,000 மற்றும் ஒருவர் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கைத் தொடர்ந்து அமைச்சர் ஜிதேந்திர ஆவாத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது.
பாஜ தலைவர்கள் பலரும் மகாராஷ்டிர அரசுக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளனர். பாஜக தலைவர் கிரிட் சோமையா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த, ‘‘ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் ஜிதேந்திர ஆவாத்தை அமைச்சர் பதவியில் இருந்து கண்டிப்பாக நீக்கம் செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]