சென்னை

மிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் கல்வி படித்து அரசு மருத்துவமனைகளில் பணி புரியாதோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவக் கல்வி கற்போர் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிவதாக ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என்பது விதி ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆனால் ஒரு சில மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருந்தாலும் 2 ஆண்டுகள் பணி புரிவதில்லை.  இவ்வாறு ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.  கடந்த ஜூலை 30 ஆம் தேதி அன்று 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு உயர் மருத்துவக் கல்வி படித்தோருக்கு அரசுப் பணிக்காகக் கலந்தாய்வு நடந்தது.

இந்த கலந்தாய்வில் பல மருத்துவ மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.  இதனால் மருத்துவக் கல்வி இயக்ககம், ஒப்பந்தத்தை மீறும் வகையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மருத்துவர்களைக் கண்டறிந்து ரூ.50 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.