சென்னை: மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அதே மொழியில் பதில் அளிக்கப்படவேண்டும் என்று மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், “மத்திய ரிசர்வ் படையின் குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 20.12.2020 அன்று நடைபெறுமென்று வெளியிடப்பட்டிருந்து. இந்த தேர்வுக்காக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக நான், தமிழக உள்துறை அமைச்சகத்திற்கும், சிஆர்பிஎஃப் பொது இயக்குனருக்கும் 09.10.2020 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதில், தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு வலியுறுத்தி இருந்தேன்.
தனது கடிதத்தில் மத்தியஅரசில் இருந்து இந்தியில் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தனக்கு மனவேதனையை கொடுத்துள்ளது. இதுபோல தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது. மத்தியஅரசின் இந்த நடைமுறை அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியிருக்கிற உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும்.
இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும். 1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3ன் படி இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, அக் குறிப்பிட்ட மாநிலம் இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத பட்சத்தில், ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு இந்தியை அலுவல் மொழியாக ஏற்க வில்லை. தமிழையும், ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாக ஏற்று அதிகாரப் பூர்வமாக சட்டமும் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 (5) மத்திய அரசின் அலுவல் தேவைகளுக்கும், நாடாளுமன்றத்தின் பயன்பாடுகளுக்கும் ஆங்கிலம் தொடர்வது பற்றி மிகத் தெளிவாகக் குறிப் பட்டுள்ளது.
இந்தியை அலுவல் மொழியாக ஏற்று ஆங்கிலத்தை தொடர்வதில்லை என்று முடிவு செய்யாத நிலையில், மாநிலங்களுக்கான தகவல் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் என்பதே சட்டபூர்வமானது.

எனவே, தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அலுவல் விதி முறைகளை மீறுகிற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் என.கிருபாகரன், எம். துரைசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கை தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் அதே மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவ்வாறு ஆங்கிலத்தில் பதில் அளிக்காவிட்டால், அது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று நினைவூட்டியதுடன், இந்தியாவில் மொழிவாரியாகதான் மாநிலங்கள் பிரிக்கப் பட்டுள்ளது என்பதை மத்தியஅரசு நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தாய் மொழியில் கல்வி கற்பதும், வெளிப்படுத்துவதும் தான் சிறந்தது என உலகளவில் அனைவராலும் ஒத்து கொள்ளப்பட்ட ஒன்று. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.