டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பெண் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்,  பேட்மிண்டன் வீரர்கள் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த் மற்றும் செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்தியஅரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.  ஏற்கனவே அர்ஜூனா, ராஜீவ்காந்த் கேல் ரத்னா, துரோணாச்சார்யா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சர்யா விருதும், விளையாட்டுக்கு அதிகம் பங்களிப்பவர்களுக்கு தயான் சந்த் விருதும் அளிக்கப்படுகிறது. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி தற்போது கேல்ரத்னா விருதுக்கு தகுதியானர்களை பரிந்துரைக்கும்படி மத்தியஅரசு சார்பில் கோரப்பட்டு உள்ளது. இந்த விருது கடந்த 2017 முதல் கொடுக்கப்படாமல் உள்ளதால்,  2017 முதல் 2020 ஆம் ஆண்டு காலம் வரை இவ்விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்கலாம் என மத்திய விளையாட்டுத்துறை சமீபத்தில் தெரிவித்தது.

இதையடுத்து, பல வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பெயரும் கேல்ரத்னா  விருதுக்கு பிசிசிஐ.பரிந்துரைத்துள்ளது மேலும், அர்ஜூனா விருதிற்கு ஷிகர் தவான், கே.எஸ்.ராகுல், பும்ரா ஆகியோர் பெயரை பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதி பெற்று இருக்கும் ஒரே இந்திய வீரருமான சாய் பிரனீத், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான ஸ்ரீகாந்த் ஆகியோரது பெயரை விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச போட்டியில் வெற்றிகளை பெற்று வரும் வீரர்களான பிரனாய், பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சமீர் வர்மா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்குமாறும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் சிபாரிசு செய்து இருக்கிறது. அத்துடன் பயிற்சியாளர்கள் முரளிதரன், பாஸ்கர் பாபு ஆகியோரது பெயரை துரோணாச்சார்யா விருதுக்கும் பரிந்துரை செய்து இருக்கிறது.
நடப்பு உலக ரேபிட் செஸ் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 34 வயது செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி கேல் ரத்னா விருதுக்கு அகில இந்திய சம்மேளனத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த கோனேரு ஹம்பி அடுத்த ஆண்டு நடைபெறும் பிடே பெண்கள் செஸ் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.
முன்னணி செஸ் வீரர்களான விதித் குஜ்ராதி, அதிபன், சேதுராமன், லலித் பாபு, வீராங்கனைகளான பாக்தி குல்கர்னி, பத்மினி ரோத் ஆகியோரது பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  விளையாட்டுத்துறை வீரர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துகளும், பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

.