டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்  தெரிவித்து உள்ளார்.

கொரோன அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி, ஒத்தி வைக்கப்பட்டு, இந்த ஆண்டு (2021) நடத்தப்படும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா அச்சுறுத்த லுக்கு மத்தியிலும் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில்  ஒலிம்பிக் போட்டி  ஜூலை 13-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க உல்க நாடுகள் தயாராகி வருகின்றன. இந்தியாவும், ஒலிம்பிக்கும் பங்கேற்கும் வீரர்களை தயார்ப்படுத்தி வருகிறது. தற்போது தகுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வழிமுறைகள் அடுத்த 2 முதல் 3 வார காலங்களில் முடிவடைகிறது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில்,  இந்திய வீரர்களுக்கான சீருடை அறிமுக விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, ரவி தஹியா, சுமித் மாலிக் சீமா பிஸ்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவர் நரிந்தர் பத்ரா,  இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள  125 முதல் 135 வீரர்கள் தகுதி பெறுவார்கள் என மதிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட 190 பேர் கொண்டதாக இந்திய குழு இருக்கும். டோக்கியோவில் இந்தியா இம்முறை இரட்டை இலக்க பதக்கத்தை எட்ட முடியும். இது முன்னோடியில்லாத சாதனையாக இருக்கும் என்றார்.

தற்போதுவரை  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து பங்கேற்க 100 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 56 வீரர்கள், 44 வீராங்கனைகள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஏற்கனவே (ஜூன் 23ந்தேதி) வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது.  இன்னும் சில வாரங்களில், டோக்கியோ 2021 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்குகிறது. நமது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.