டெல்லி: மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனம்,  தடுப்பூசியின் விலையை திடீரென இரு மடங்காக உயர்த்தியது. மேலும், கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் என்றும் மத்தியஅரசுக்கு ரூ.150 என்றும் விலை நிர்ணயம்  செய்திருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும்,  நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகம் உள்பட 4 மாநிலங்கள், தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என அறிவித்தன.

இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளுக்கான செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.