டெல்லி: எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான   INI-CET PG 2021 நுழைவுத்தேர்வு ,  கொரோனா தொற்று  காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டு புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 மத்திய அரசுக் கல்லூரிகளுக்கு நீட் முதுகலை படிப்புக்கு  (PG Courses MD, MS, DM (6 years), MCH (6 years), MDS) இனி-செட் (INI-CET) என்ற புதிய தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வை   எய்ம்ஸ் நடத்துகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான INI-CET PG 2021 நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பதுடன், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.