சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி, மே 2ந்தேதி காலை 8 மணிக்கு   தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில்  தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சனிடம் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,

மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றைய தினம் ஊரடங்கு ரத்து குறித்து அரசு அறிவிக்கும். வாக்கு எண்ணும் சூழ்நிலையை பொறுத்து எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை கையாள வேண்டும் என முடிவெடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை எடுப்பது குறித்து தொடர்ந்து சுகாதாரத்துறையுடன் ஆலோசனை செய்துவருகிறோம்.

வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன் தேர்தல் பணியாளர்கள், முகவர்களுக்கு ‘கொரோனா பரிசோதனை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. . இது குறித்து ஓரிரு நாளில் முடிவு வெளியாகும்.

வாக்கு எண்ணிக்கையின்போது, இதுவரை 14 மேசைகள் வைத்து வாக்கு எண்ணும் நடைமுறை நீடிக்கிறது. வாக்கு எண்ணும் அறை சிறியதாக இருந்தால் 7 மேசைகளும் மற்றொரு அறையில் 7 மேசைகளும் அமைக்கப்படும். குறைந்தபட்சம் கண்டிப்பாக 14 மேசைகள் இருக்கும்.  மேசைகளை குறைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.

கொரோனா தொற்று அதிகரித்து வரும  காரணத்தால், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் கூடுதலாக 20 விழுக்காடு பணியாளர்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின்போது, பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளன. அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.