சென்னை:  மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணுவுக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 95 வயதாகும் நல்லக்கண்ணு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது.