டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:  கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடுவதற்கான கால அளவை நீட்டிப்பதால் கூடுதல் பலம் அளிக்கிறது.

எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் தற்போது 4 வாரங்களாக உள்ளது. அதனை 4 வாரத்திலிருந்து 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே இந்த கால அவகாச நீட்டிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தடுப்பூசி குழுவின் சிறப்பு உறுப்பினர்கள், தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த அறிவுரையை அனுப்பியுள்ளது.